tamilnadu

img

74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்று கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி!

ஆந்திராவில் 74 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்த ராஜா ராவ் மற்றும் மங்கம்மா தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லாமல் இருந்ததால், பல்வேறு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முயற்சியை கைவிடாத இந்த தம்பதி, கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் குண்டூரில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையை அணுகினர். மங்கம்மாவின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை பெற்றெடுப்பதற்கான முழு உடல் தகுதி பெற்றிருப்பதை உணர்ந்தனர்.

இதையடுத்து, ஜனவரி மாதம் ஐவிஎஃப் மூலம் செயற்கை கருவூட்டல் நிகழ்த்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் சிசேரியன் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை இன்று பெற்றெடுத்தார். தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனையை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.

முன்னதாக 2006-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது 66-வது வயதில் குழந்தை பெற்றதே கின்னஸ் சாதனையாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.